விருசர' வரப்பிரசாத அட்டை திட்டத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயும் விஷேட கலந்துரையாடல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் நேற்று (14) இடம்பெற்றது.
விருசர வரப்பிரசாத அட்டை' திட்டத்தின் மூலம் வழங்கப்படும் வரப்பிரசாதங்களை மேலும் அதிகரிப்பதற்கான பல்வேறு முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் இவ்வாண்டில் (2016) பல்வேறு படிமுறைகளில் மொத்தமாக 25,000 அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன எனவும் எதிர்வரும் ஆண்டில் (2017) மேலும் 25,000 விருசர அட்டைகளை வழங்க எதிர்பார்ப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் இச்செயற்றிட்டத்திற்கு தமது பூரண ஒத்துழைப்புக்களை நல்கிவரும் அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு தமது நன்றியினை தெரிவித்த இராஜாங்க அமைச்சர் தனியார் துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்களிப்பை மேலும் அதிகரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்
மேலும் , விருசர திட்டத்தின் தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் எதிர்வரும் காலங்களில் அவற்றினை சிறப்பாக முன்னெடுப்பது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டன. விருசர வரபிரசாத அட்டை திட்டத்தின் பயனாளிகளுக்கு பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்க எதிபார்க்கும் இக்கலந்துரையாடலில் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஏபிஜி கித்சிறி , ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவி திருமதி அனோமா பொன்சேகா, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.