பாடசாலைகளில் நிருவாக சபைகளை உருவாக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் பாடசாலைகள் நிருவாக சபைகளினூடாக நிர்வகிக்கும் வகையில் இந்த சபைகள் உருவாக்கப்படவுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த பாடசாலைகளுகென ஸ்தாபிக்கப்படும் நிருவாக சபைகளிடம் பாடசாலைகள் ஒப்படைக்கப்படும் என்றும், தற்போதைய கல்வி முறையில் அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்புக்களை முன்னெடுக்கும் வகையில் இச்சபைகள் உருவாக்கப்படும்.
இதனூடாக பாடசாலையின் முகாமைத்துவம் மற்றும் நிருவாகம் தரமுடையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாடசாலைக்கான நிருவாக சபை ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் பாடசாலையின் அனைத்து நிருவாகம் மற்றும் முகாமைத்துவம் அச்சபையிடமே ஒப்படைக்கப்படும்.
அச்சபையில் பாடசாலை அதிபர், பாடசாலை அபிவிருத்தி சபை பிரதிநிதிகள், கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகள் உள்வாங்கப்படுவர். சபை ஸ்தாபித்தல் தொடர்பாக கல்வியமைச்சு உத்தியோகபூர்வ பாடசாலைகளுக்கு அறிவிக்கும்.
பாடசாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு குறித்த சபையே பொறுப்பு வகிக்கும் என்பதுடன் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்தல் தொடர்பிலும் அச்சபை நடவடிக்கை மேற்கொள்ளும்.
இச்சபையை நிர்வாகிக்கும் பொறுப்பு கல்வியமைச்சிடமே உள்ளது. அதேபோல், கல்வி முகாமைத்துவ தகவல் முறைமையொன்றையும் கல்வியமைச்சு அறிமுகம் செய்து வைக்கவுள்ளது.
எதிர்வரும் இரு ஆண்டுகளுக்குள் நிர்வாகச்சபை நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் ஸ்தாபிக்கப்பட்டு நிருவாகம் கையளிக்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.