நாளை (06) காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தோற்றவுள்ள அனைத்து மாணவர்களும் காலை 8.00 மணிக்கே தத்தமது பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளிக்கவேண்டும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியு.எம். என். ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
பரீட்சையில் தோற்றவுள்ள அனைத்து மாணவர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பரீட்சை அனுமதிப்பத்திரம், தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டை எடுத்து வருவது அவசியம்.
பரீட்சைக்கு வரும் போது பரீட்சை அனுமதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சரியாக உள்ளதாக என்பதனை சரிபார்த்து கொள்ள வேண்டும். தாம் விண்ணப்பித்த விடயதானங்கள், பரீட்சை நிலையங்கள், பழைய அல்லது புதிய பாடத்திட்டம் போன்ற அம்சங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும்.
பரீட்சை நிலையத்திற்கு கையடக்கத் தொலைபேசி கொண்டு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன், விடைகளை சொல்லிக்கொடுத்தல் மற்றும் குறிப்புக்களை வைத்திருத்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன், அவ்வாறு செய்து கண்டுபிடிக்கப்பட்டால் அவருடைய பெறுபேறுகள் ரத்து செய்யப்படும் என்றும் ஆணையாளர் எச்சரித்துள்ளார்.
பரீட்சை நிலையங்களில் தவறுகள், அநீதிகள் ஏதும் நடைபெறும் பட்சத்தில் அன்றைய தினமே 24 மணி நேரமும் சேவையிலுள்ள கீழ் வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு முறைப்பாடு செய்ய முடியும்.
பரீட்சைத் திணைக்கள உடனடி இலக்கம் - 1911
பாடசாலை பரீட்சை ஒழுங்கமைப்பு கிளை- 0112784208/0112784537/ 0113188350/0113140314
பொலிஸ் தலைமையகம்- 0112421111
பொலிஸ் அவசர அழைப்பு எண் - 119
வழங்கப்படும் அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், பரீட்சைத் திணைக்களத்தினூடாக மாகாணசபை மற்றும் வலய மட்டத்தில் பரீட்சை நிலையம் மற்றும் ஒருங்கிணைப்பு மத்திய நிலைய மேற்பார்வைக்காக விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஒரு பரீட்சார்த்திக்கு பதிலாக வேறொருவர் பரீட்சையில் தோற்றுவதற்கு கண்டறிந்தால் பரீட்சை நிலையத்தினுள்ளேயே கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 17 ஆம் திகதி வரைக்கும் நடைபெறவுள்ள சாதாரணதர பரீட்சையில், இம்முறை சுமார் 7 இலட்சத்திற்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்றவுள்ளனர். 65 ஆயிரத்து 524 ஆசிரியர்கள் கடமையில் ஈடுப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.