எந்தவொரு பிரச்சினைக்குமான தீர்வை பெற்றுக்கொள்வதற்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமல் கலந்துரையாடுங்கள் என்று ஜனாதிபதி தொழிற்சங்கங்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.
நேற்று (01) பாராளுமன்றில் தேசிய கலந்துரையாடல் மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுக்கான நிதியொதுக்கீட்டுக்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வழைப்பினை மேற்கொண்டுள்ளார்.
ஜனநாயக அரசு என்ற ரீதியில் எந்தவொரு பிரச்சினையையும் கலந்துரையாடல்களினூடாக தீர்ப்பது என்பது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை. பிரச்சினைகள் இருப்பின் அந்தந்த துறைகளுக்கு பொறுப்பாக இருக்கும் அமைச்சர்களுடன் கலந்துரையாடுமாறு நான் அனைத்து தொழிற்சங்கங்களிடமும் கோருகிறேன். அங்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் அமைச்சர்கள் உள்ளடங்கிய விசேட குழுவினை அமைத்து அந்த பிரச்சனைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும். அதிலும் சரியான கிடைக்காவிடின் நான் அப்பிரச்சினையில் தலையிட தயாராகவுள்ளேன்.
பணிப்பகிஷ்கரிப்பு, வீதிகளை தடை செய்து மணித்தியால கணக்கில் போராட்டங்கள் நடத்துவது போன்றவற்றால் அப்பாவி பொதுமக்களே பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனர். செல்வந்தர்கள் அல்ல.
நாட்டில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்றிட்டம் மற்றும் புதிய அரசியலமைப்பு குறித்து எதிராக கதைக்கும் அனைவருக்கும் நாட்டினும் மீண்டும் இரத்த ஆறு ஓடுவதை காண்பதே நோக்கம். எதிர்கால அதிகாரத்தை கவனத்திற்கொண்டு நல்லிணக்கத்தை இல்லாதொழிக்க பாடுபடுவார்களாயின் அவர்களுக்கு எதிர்காலத்தில் அதிகாரத்தை கையிலெடுக்க முடியாது. எதிர்காலத்தில் ஏற்படும் நிலைமைக்கு அவர்களே பொறுப்பு கூறவேண்டும்.
கட்சி நிறம், இனம், மதம், மாகாண பேதத்துடன் செயற்படும் போது இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. பிரச்சினை தொடர்பில் கதைக்கும் அனைவரும் அதனை தீர்ப்பதற்கு இடமளிக்க வேண்டும். அதற்கு அரசியல் வீரர்கள் பொருத்தமில்லை. பிரச்சினையை புரிந்து தீர்வு பெற்றுக்கொடுக்கும் தலைவர்களே. அதிகாரத்தில் இருக்கும் போது ஒரு விதமாகவும் இல்லாதபோது ஒருவிதமாகவும் இந்த பிரச்சினையை பயன்படுத்தினால் அது அந்த இனத்தின் அழிவுதான் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.