• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

தமது பொறுப்புக்கூறல் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்ப வேண்டும்

ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் எந்தளவுக்கு பொறுப்புக்கூறும் தன்மையுடன் செயற்படுகின்றன என்பது தொடர்பில் தமக்கு தானே கேள்வியெழுப்புவது மிகவும் முக்கியம் என்று அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய தெரிவித்தார்.
லஞ்ச ஊழல் தொடர்பான சம்பவங்களை ஊடகங்களில் அறிக்கையிடுவது என்பது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கு இன்று (29) நடத்தப்பட்ட செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே பணிப்பாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,  நாட்டின் பிரதானமான நான்கு தூண்களாக நிறைவேற்று அதிகாரம், அரசியலமைப்பு, நீதிமன்றம் மற்றும் ஊடகத்துறை என்பன பார்க்கப்படுகின்றன.  ஊடகம் தவிர்ந்த ஏனைய மூன்று விடயங்களை நோக்கும் போது அதில் உள்ள பொறுப்புக்கூறல், பொதுநலன் எந்தளவுக்கு ஊடகத்தில் உள்ளது? 
 
நாம் ஊடகத்திற்கு ' சுதந்திர ஊடகம் என்று கூறுகிறோம். அந்த சுதந்திரம் எந்தளவுக்கு ஊடகத்துக்கு உள்ளது?  ஊடக அறிக்கையிடுதல் என்கிறபோது ஜனநாயகம், ஊடகத்தின் வகிபாகம், பொது ஆர்வம், நிகழ்ச்சி நிரல் மற்றும்  பின்னூட்டல் என்பவற்றுக்கு ஊடகத்துறையில் எந்தளவுக்கு இடமளிக்கப்படுகிறது?
 
இங்கு பல விடயங்களை ஆய்வு செய்து எழுதிய அனுபவம் மிக்க ஊடகவியலாளர்கள் உள்ளனர். தேசிய பிரச்சினையை வௌியுலகிற்கு எடுத்துச் சென்றவர்கள் உள்ளனர். அவர்களைப் போல் எத்தனைப் பேர் இன்று ஆய்வுகளை செய்து செய்திகளை வௌியிடுகின்றனர்?
 
ஊடகம் என்பது உண்மையிலேயே சுதந்திரமாக இயங்குகிறதா? ஜனநாயகம் என்பதில் ஊடக பொறிமுறை சரியான முறையில் செயற்படுகிறதா? எத்தனை ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கினாலும், விழிப்புணர்வு வழங்கினாலும் நூற்றுக்கு 50 வீதம் கூட வெற்றியளிப்பதில்லை. இன்றைய தினம் செய்தி நிகழ்ச்சி நிரலை தீர்மானிப்பது? நாளை பத்திரிகையின் உள்ளடக்கத்தை தீர்மானிப்பது யார்? ஆசிரியரா? இன்று மாலை ஒலிபரப்பாகும் செய்திகளின் தலையங்கத்தை தீர்மானிப்பது யார்? செய்த முகாமையாளரா? ஊடகவியலாளர்களா? இந்த கேள்விக்கு நாம் பதிலை தேடிப்பார்த்தால் அதில் எமக்கு பிரச்சினை ஒன்றுள்ளது. 
 
எமது நோக்கம் என்ன? புத்தகத்தை பொறுத்தவரை பொதுமக்களின் ஆர்வம், விருப்பம். பொது நலன்புரி. இதுதான் நாம் கற்பிக்கிறோம். இவை அனைத்தையும் செய்வது பொது நலனுக்காகத்தானே. அப்படி பொதுநலன்தான் எமது நோக்கமாக இருந்தால் அது ஒரு வியாபாரமாக எவ்வாறு மாற முடியும்? ஊடகத்துறை என்பது தற்போது ஒரு வியாபாரம். பொதுநலன் என்றால் எவ்வாறு வியாபாரமாக முடியும்? அப்படியானால் இங்கு பொது விருப்பத்திற்கு மேலான வேறு ஏதோ இங்குள்ளது. அப்படியானால் அது என்ன? ஒன்று வியாபார நோக்கம் மற்றது அரசியல் நோக்கம். இன்னொரு நோக்கமும் உள்ளது. கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவது. அந்த மூன்று விடயத்துக்கும் தான் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. பொது மக்களின் விருப்பத்துக்கு அல்ல.
 
ஊடகம் தொடர்பில் கற்பிக்கும் போது உள்ள விமர்சனம் தான் பொதுமக்களின் விருப்பம் என்ற விடயம் காணாமல் போய் வேறு மூன்று விடயங்கள் மேலெழும்புகின்றமை. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண ஊடகவியலாளர்களை பயிற்றுவித்த பயனில்லை. வழங்கப்படும் பயிற்சி நூற்றுக்கு 50 வீதம் மட்டுமே பயனளிக்கும். மிகுதி 50 வீதம் கண்ணுக்கு தெரியாத இடத்திலேயே உள்ளது. பொதுமக்களின் ஆர்வம், விருப்பம் கவனத்தில் கொண்டு செயற்பட்டால் மாணவர்களுக்கு ஊடக விமர்சனம் என்ற ஒரு விடயத்தை நாம் கற்பிக்க தேவையில்லை. அதற்கு மேலாக சென்ற விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவதற்காத்தான் அதனை மாணவர்களுக்கு கற்பிக்கிறோம்.
 
பொது மக்களின் விருப்பம் என்பதற்கு அப்பால் சென்று வணிக நோக்குடன் செயற்பட்டால் எம்மால் மன்னிக்க முடியும்.  ஏனென்றால் அது வியாபாரம்.  இதனூடாக வணிக போட்டியொன்று உருவாகிறது. அதுவும் வெறுமனே வணிக போட்டியாக இருக்கக்கூடாது. நெறிமுறையுடன் கூடிய வணிக போட்டியாக இருக்க வேண்டும். அது ஆரோக்கியமான ஊடகதுறையாக இருக்கும். ஆரோக்கியமான ஊடகத்துறைக்கான அடையாளம் அது. ஆனால் அரசியல் நோக்கம் வருமாக இருந்தால் அது மிகவும் அபாயகரமானது. 
 
அரசியல் நோக்கமொன்று இருந்தால் பரவாயில்லை. அதனையும் ஊடக சம்பிரதாயமாக உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. அப்படியான அரசியல் நோக்கம் இருந்தால் இதுதான் எங்கள் அரசியல் நோக்கு என்பதை மக்களுக்கு நாம் கூறவேண்டும். அப்படியானால் மக்கள் தீரமானிப்பார்கள் இந்த தொலைக்காட்சியை பார்ப்பதா? இது தமக்கு பொருத்தமானதா?  என்று அவர்கள் தீரமானிப்பார்கள். உங்கள் கொள்கை இதுதான் என்பதை ஆரம்பத்திலேயே கூறுங்கள்.
 
ஆனால் ஊடகத்தின் நிகழ்ச்சி நிரலை ஆராயும் போது இதில்தான் பிரச்சினை எழும்புகிறது. இதெல்லாம் நல்லபடியாகவே இருக்கிறது என்று நாம் வைத்துக்கொள்வோம். நாம் பிதான தளத்திற்கு கொண்டு வந்த பல பிரச்சினைகளை நோக்குவோம். உதாரணத்திற்கு ஹெட்சிங் ஒப்பந்தம். பல வாரங்களாக அனைத்து ஊடகங்களிலும் அதிகமாக பேசப்பட்ட, ஒளிபரப்பட்ட ஒரு விடயம். அந்த காலப்பகுதியில் வெளியான இரு வார பத்திரிகைகளை எடுத்து ஆய்வு செய்து பாருங்கள். எந்தளவுக்கு அந்த செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகின்றன? ஒரு சம்பவம் தொடர்பான செய்தி வெளியிடப்பட்டால் அதனை தொடர்ச்சியாக ஆராய்ந்து வெளியிடுவது ஊடகத்தின் பொறுப்பு.
 
ஒரு சம்பவம் நிகழும், அதனை பிரசுரிப்போம், மறுபடி இன்னொரு சம்பவம் நடக்கும், முதல் நடந்த சம்பவத்தை மறந்துவிடுவோம். சமூகம் அப்படித்தான். ஆனால் தரிந்து ரத்து பஸ்வல சம்பவம் தொடர்பில் தொடர்ந்து ஆராய்ந்து எழுதியது போல் நாம் ஒரு விடயம் நடந்தால் அது தொடர்பில் தொடர்ச்சியாக ஆராய்ந்து தீர்வு கிடைக்கும் வரையில் மக்களுக்கு தகவல்களை வழங்கவேண்டும். அது நடக்கிறதா? இல்லை அப்படி நடப்பதில்லை.
 
இவ்வாறு இருந்தால் அரசாங்கங்களுக்கும் மிகவும் இலகு. நிறுத்தாத போராட்டம் ஒன்று ஊடகத்தில் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட போராட்டங்களை நாம் விரல்விட்டு எண்ண முடியும். அதனால்தான் பொது விருப்பம் என்பது புதைந்து போகிறது என்று நான் கூறுகிறேன்.
 
ஏதாவது ஒரு விடயத்தை நாம் பிரசுரிக்க, ஒளி/ ஒலிபரப்பதாயிருந்தாலும் அதனை விற்பனை செய்யும் வகையில் தானே வெளியிடுவது தானே எமது நோக்கம். அதனை தான் நாம் செய்கிறோம். சமூக விருப்பம் என்பதை சரியாக வரையறை செய்யும் வரையில், அதனை எமது செய்தி அறைக்கு கொண்டும் வரும் வரையில் இந்த கதைகளுக்கு இடம் கிடைக்கப் போவதில்லை. நடைமுறையில் இருக்கு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இருந்தால் மட்டுமே இடம் கிடைக்கும். அல்லது தமது வணிக நோக்கை பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும்.
 
அதற்கு பிறகுதான் ஊடகவியலாளர்களுக்கு அவசியமான பயிற்சிகளை வழங்குதல், அதற்கேற்றாற் போல் மாற்றுதல் என்பன. இதனை செய்ய எத்தனை பேர் பாடுபடுகின்றனர்? முயற்சிக்கின்றனர்? முன்பெல்லாம் தொலைபேசியில் செய்திகளை பெற முடியாது. அது தடை செய்யப்பட்ட விடயம். சென்று தேடி செய்திகளை எழுத வேண்டும். இன்று எத்தனை பேர் கஷ்டப்பட்டு செய்திகளை சேகரிக்கின்றனர்? இன்று எத்தனை பேர் செய்திகளை ஆழமாக  தேடுகின்றனர்? 
 
முன்னரென்றால் ஊடகவியல் கற்ற மாணவர்களாவது இருந்தனர் கொஞ்சமாவது அவ்வாறு செயற்படுகிறவர்கள். இப்போது அப்படியான ஒரு பொறிமுறையும் இல்லை. அவ்வாறான ஒரு குழுவை உருவாக்குவதற்கு,  2016ஆம் ஆண்டுக்கு பின்னர்  7, 8 ஆண்டுகள் ஊடக கற்கையை வழங்க நாம் தவறியுள்ளோம். இது ஒரு பாரிய பிரச்சினை. 
 
இதனால் ஊடக ஆய்வை மேற்கொள்வது எவ்வாறு? செய்தியொன்றை எப்படி தேடுவது?  என்பது பெரிய பிரச்சினையாக உள்ளது? 
 
நாம் ஏனையவர்களின் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஆராய்கிறோம். பாராளுமன்ற உறுப்பினர்கள், நிறுவனங்கள், அரசாங்கம், நீதிமன்றம் என அனைவரினதும் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஆராய்கிறோம். தற்போது லங்கா இ நியுஸ் பிரச்சினை தொடர்பில் ஊடகங்கள் நீதிமன்றத்தின்  பொறுப்புக்கூறல் தொடர்பில் கேள்வியெழுப்புகின்றன. மிகவும் நல்லது. அதற்காக தான் நாம் புதிய எண்ணக்கருக்களை உருவாக்கி, நல்லாட்சியை கொண்டு வந்துள்ளோம். அதுதான் எங்கள் வேலை. அத்தோடு, தமது பொறுப்பு பற்றியும் பார்க்க வேண்டும். ஊடகத்தின் பொறுப்புக்கூறல். நாம் எந்தளவுக்கு பொறுப்புக்கூறலுடன் செயற்படுகிறோம். 
 
ஊடகவியலாளர்களின் பொறுப்புக்கூறல், ஊடக நிறவுனங்களின் பொறுப்புக்கூறல், ஊடக உரிமையாளர்களின் பொறுப்புக்கூறல் அவை தொடர்பிலும் நாம் கதைக்க வேண்டும். சாதாரணமாக காகத்தின் இறைச்சியை காகம் சாப்பிடுவதில்லை என்று நாம் கூறுவோம். ஆனால், இப்போது அப்படி முடியாது. நம்மை பற்றி நாம் நினைப்பதற்கான காலம் தற்போது தோன்றியுள்ளது. ஊடகத்துக்கு என்ன, எங்கிருந்த பணம் வருகிறது? ஊடகம் எந்த பக்கமாக இயங்குகிறது? என்று நாம் ஆராய வேண்டும். 
 
இது இலங்கைக்கு மட்டுமே உரித்தான பிரச்சினை அல்ல. உலகலாவிய பிரச்சினை. பாரிய அளவு நிதி முதலீடு செய்ய வேண்டிய ஊடகத்துறைக்கு எங்கிருந்த பணம் வருகிறது? இலங்கையில் தற்போது வழக்கொன்றும் தொடரப்பட்டுள்ளது ஒரு ஊடகத்துக்கு எதிராக. நாம் மிகவும் முக்கியமான விடயம் ஒன்றை பற்றியே இன்று கதைக்கிறோம். 
 
நாம் பிள்ளைகளுக்கு என்ன கற்பிக்கிறோம். உங்களுடைய கண்ணாடி, தொப்பியை வெளியிலேயே கழற்றி விட்டு பளிங்கு போன்ற தெளிவானவராக செய்தி அறைக்குள் வரவேண்டும் என்று சொல்கிறோம். ஆனால் அது நடைமுறை சாத்திமில்லை. அவ்வாறாக முடியுமா?  நடக்கிறதா? நீங்கள் கண்ணாடியை கழற்றினாலும் உங்கள் உரிமையாளர் கண்ணாடியை கழற்றுவரா?  பொதுநிலைத்தன்மை என்பதை ஊடகவியலாளருக்கு மட்டுமே கற்பித்து போதாது. ஊடகத்துறைசார் அனைவருக்கும் வழங்க வேண்டும். 
 
அவ்வாறின்றி இத்துறையை துப்பறவு செய்ய முடியாது. இங்கு வந்த அனைத்து வளவாளர்களும் சமூகத்தை சுத்தப்படுத்துவது தொடர்பில் தெரிவித்தனர். சமூகத்தை சுத்தப்படுத்த நாமும் சுத்தமாகி இருக்க வேண்டும். ஊடகத்துறையலும் சில பொறுப்புக்கூறல் தன்மை பிரச்சினைகளை தீர்க்க வேண்டியுள்ளது.
 
இலஞ்ச ஊழல் மோசடிகளை ஊடகத்தில் இருந்தும் நீக்க வேண்டும். அதனை ஊடகத்தில் இருந்த நீக்க முதலில் ஊடகவியலாளர்கள் நிமிர்ந்து நிற்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். பசியோடு இருக்கும் போது போதிக்கவும் வேண்டாம் என்று புத்தர் கூறியுள்ளார். எமது ஊடகவியலாளர்களுக்கு பாரிய பிரச்சினைகள் உள்ளன.
 
இன்று காலை நான் சென்ற ஒரு கூட்டத்தில் கிழக்கில் ஒரு பிக்கு ஊடகத்திற்கு லஞ்சம் வழங்குவதாக கூறபட்டது. லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யலாம் என்று நாம் பார்த்தோம். ஆனால் அரச ஊழியர்களுக்கு எதிராக மட்டுமே அதில் முறைப்பாடு செய்யலாம். முடிந்தால் ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் முறைப்பாடு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்த முயற்சிப்போம்.
 
ஊடகவியலாளர் சந்திப்பிற்கு சென்றால் 15,000 ரூபா வழங்குகிறாராம். வார இறுதி பத்திரிகைகள் அனைத்தில் அவர்தான் உள்ளார். இலத்திரனியல் ஊடகங்களுக்கு 15,000 ரூபா, அச்சு ஊடகங்களுக்கு 10,000 ரூபா. இவை தொடர்பில் யார் கதைக்கிறார்கள்? நான் சாட்சியுடன் கூறுகின்றேன். தனது ஊடகத்தை பிரபலப்படுத்த தனது ரேடியோவை, தொலைக்காட்சியை பார்ப்போருக்கு 10,000 ரூபா. இது இலஞ்சமா? இன்னும் இதனை தேடிக்கொண்டிருக்கிறேன். 
 
ஊடகங்கள் பொதுச்சொத்தை பயன்படுத்தி இயங்குகின்றன. அதனை தமக்கு நினைத்தாற் போல் பயன்படுத்த இடமளிக்க முடியாது. இவை தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். இதனை யாரும் கதைப்பதில்லை. நாம் கதைக்க வேண்டும். இதற்கு ஏதாவது செய்ய வேண்டும். நாம் மற்றவர்களை பார்த்து சத்தம் போட்டாலும் நமக்குள் அதைவிட பிரச்சினைகள் உள்ளன. 
 
முழு ஊடகமும் பிரச்சினை நிறைந்தது என்று நான் கூறவரவில்லை. எனினும் நாம் எம்மை நோக்கியும் பார்க்க வேண்டும், ஊடகத்துறையையும் எம்மையும் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையே சுட்டிக்காட்ட விருப்புகிறேன் என்று தெரிவித்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.