பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலக கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாவும் வருகைக் கொடுப்பனவாக 2,500 ரூபாவும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பெற்றோலியவளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி இதனை தெரிவித்தார்.
மேலும், பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக முன்வைத்த அமைச்சரவை பத்திரங்களுக்கு அமைவாக அமைச்சரவை இதற்கு அனுமதி வழங்கியுள்ளது
எம்.பி.க்களுக்கான அலுவலக கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாவை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் சமர்ப்பிக்கப்பட்டது. இது தவிர எம்.பி.க்களின் பாராளுமன்ற வருகைக்காக நாளொன்றுக்கான கொடுப்பனவை 500 ரூபாவில் இருந்து 2500 ரூபாவாக அதிகரிக்கவும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது
இந்த அமைச்சரவை பத்திரங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. மக்களுக்கு சேவையாற்றுவதற்கு எம்பிகளுக்கு போதிய வசதிகள் அவசியம்.சில எம்பிகள் தமது சொந்தக் கட்டிடத்தில் அலுவலகம் வைத்துள்ளனர். ஆனால் அலுவலகத்தை நிர்வகிக்கவும் செயற்படுத்தவும் செலவிட வேண்டும்.சிலவேளை ஆதரவாளர்கள் அலுவலகம் தந்து உதவுவர். ஆனால் அங்கிருந்து கொண்டு மக்களுக்கு சேவையாற்றுவதில் சிக்கல் ஏற்படும் என்றார்.
எம்பிகள் அலுவலகம் நடத்தவும் திருமண மற்றும் மரண வீடுகளுக்கு செல்கையிலும் அன்பளிப்பு வழங்கவும் அவர்களுக்கு பணம் தேவை என்பதால் அவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவு வழங்க இருப்பதாக பிரதமர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.