பொலிஸ் அதிகாரிகளுக்கு மருத்துவ காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அதிவேக வீதி அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.
நேற்று (24) நாராஹேன்பிட்ட பிரதேசத்திலுள்ள பொலிஸ் வைத்தியசாலையை பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கடற்படையினருக்கான மருத்துவ காப்புறுதி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அக்காப்பீட்டினூடாக சுமார் 15 இலட்சம் ரூபா வரையில் காப்புறுதி பணம் வழங்கப்படுகிறது. இதனூடாக வேறு மருத்துவமனைகளில் அல்லது வௌிநாடு சென்றாவது தேவையான சிகிச்சைகளை பெற முடியும். இம்முறையை பயன்படுத்தி பொலிஸ் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறும் நோயாளர்கள் மற்றும் பொலிஸ் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவற்கு செல்ல முடியாத நோயாளர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உட்பட பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் உடனிருந்தனர்.