பத்திரிகை மற்றும் அது தொடர்பான வெளியீடுகளை புதிய ஊடகம் பின்தள்ளி முன்னேறிக்கொண்டிருப்பதாகவும் அதற்கேற்ப நாம் எம்மை மாற்றிக்கொள்வதற்கான காலம் இதுவாகும்
என்றும் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய தெரிவித்துள்ளார்.
மீள்பார்வை பத்திரிகையின் 20 வருட பூர்த்தி மற்றும் விருது வழங்கல் நிகழ்வு நேற்றுமுன்தினம் (16) தபால் தலைமையக கேட்போர்கூடத்தில் நடைபெற்றபோது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நிகழ்காலத்தில் மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்களை தோற்றுவிக்கும் ஊடகமாக சமூக வலைத்தளங்கள் இயங்குகின்றன. அதனை பயன்படுத்துகிறவர்கள் மத்தியில் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பும் வகையில் பயன்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
இலங்கையின் தமிழ் பத்திரிகைகள் கடந்த சில தசாப்தங்களாக பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளன. மொழிரீதியாக அல்லாது கலாசார ரீதியாக ஊடககலை கட்டியெழுப்பப்படவேண்டும்.
மீள்பார்வை போன்ற பத்திரிகைள் கடந்த காலங்களில் இலாப நோக்கோடன்றி தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் வகையில் முன்னின்றி பணியாற்றி வந்துள்ளன. அதேபோல் நிகழ்காலத்திலும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கையர்களாக இணைந்து செயற்படுவதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் பணிப்பாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டினார்.