ஓய்வுபெற்ற இராணுவ மனித வளத்தை தேசிய அபிவிருத்திக்கு பயன்படுத்தும் தேசிய திட்டத்தின் முதற்கட்டமாக தொழில்நுட்ப அதிகாரிகளாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட ஓய்வுபெற்ற 50 இராணுவ வீரர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
தொடர்ந்தும் சேவையாற்றக்கூடிய வயதில் உள்ள ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களை மீண்டும் தேசிய அபிவிருத்திக்காக பயன்படுத்தி அதனூடாக அவர்களது நலன் பேணலை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அரச சேவையில் உரிய காலத்தைப் பார்க்கிலும் மிகக் குறைந்த வயதெல்லைகளில் ஓய்வுபெறும் இராணுவ வீரர்கள் தமது அறிவு மற்றும் அனுபவங்களை நாட்டுக்கு முழுமையாக பெற்றுக்கொடுக்கக்கூடிய சந்தர்ப்பத்திலேயே சேவையில் இருந்து ஓய்வு பெறுகின்றனர் என இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், தற்போதைய அரசாங்கம் இராணுவ வீரர்களை கவனிப்பதில்லை என்று சிலர் குற்றச்சாட்டுக்களை முன் வைத்தபோதும் கடந்த அனைத்து அரசாங்கங்களைப் பார்க்கிலும் தற்போதைய அரசாங்கமே இராணுவ வீரர்களின் நலன் பேணலை மேற்கொண்டு அவர்களது கௌரவத்தை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. இந்த நியமனங்களை வழங்குவதன் மூலம் அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளுக்கு எவ்வித தடையும் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.
நாட்டின் தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யக்கூடிய வயதில் சுமார் 1,13,598 இராணுவ வீரர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அவ்வீரர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கும், அவர்களது நலன் பேணவும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஒரு தனியான பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் நலன் பேணல் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான ஒரு இணையத்தளமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.