நாட்டில் நிலவும் வரட்சியாயான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை மக்களிடம் கோரியுள்ளது.
நாட்டின் 17 மாவட்டங்களில் நிலவும் கடுமையான வரட்சி காரணமாக சுமார் ஐந்தரை இலட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய வெப்ப காலநிலையினால் நீரின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் வரட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு நீர் வழங்கல் சபையுடன் இணைந்து பௌசர்களினூடாக நீர் வழங்கி வருகிறது.
அத்துடன் பிரதேச செயலங்கள், மாவட்ட செயலகங்களினூடாகவும் மக்களின் நீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு நீரை மக்களுக்கு வழங்குவதற்காக ஆயிரம் மற்றும் ஐநூறு லீற்றர் நீர்தாங்கிகளை கொள்வனவு செய்ய அனர்த்த முகாமைத்துவ அமைச்சு நிதியொதுக்கியுள்ளது என்றும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மக்களின் நீர்த்தேவையை பூர்த்தி செய்வதற்காக சுமார் 181 இலட்சம் ரூபா நிதியை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஒதுக்கியுள்ளது என்று அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அண்மையில் பாராளுமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.