ஆசிய வலய நாடுகளுக்கு பொதுவாக தாக்கம் செலுத்தும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்படும் ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டின் அரச தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (10) உரையாற்றவுள்ளார்.
34 நாடுகள் கலந்துகொள்ளவுள்ள இம்மாநாட்டில் ஆசியாவில் வளங்களை மேம்படுத்தி உலசக் சந்தையில் போட்டியிடுமளவுக்கு ஆசிய வலயத்தை உருவாக்குவது என்பது தொடர்பில் இம்முறை அரச தலைவர்கள் மாநாட்டில் கவனம் செலுத்தப்படவுள்ளது. இம்மாநாட்டில் பல விடயங்கள் தொடர்பில் பல்வேறு பொது இணக்கப்பாடு ஏற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கையானது ஏனைய ஆசிய நாடுகளுடனான ஒத்துழைப்பை எவ்வாறு மேம்படுத்திக்கொள்வது என்பது தொடர்பில் ஜனாதிபதி இன்று உரையாற்றவுள்ளார்.
அரச மற்றும் தனியார் பிரிவுகள் இணைந்து ஆசிய வலயத்தை அபிவிருத்தியடைந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான அரச திட்டமிடலுக்கமைய நேற்று இம்மாநாடு ஆரம்பமானது. 34 நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களும் கைத்தொழிலாளர்களும் கலந்துகொண்டனர்.
இம்மாநாடு தாய்லாந்து பிரதமர் தலைமையில் நேற்று (09) ஆரம்பமானது. இந்நிகழ்வின் விசேட விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற விசேட இராப்போசன விருந்திலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.