ஆடை உற்பத்தியினூடாக வருடாந்தம் 1.8 மில்லியன் ரூபா தேசிய வருமானத்தை ஈட்டும் நோக்கில் நாடு முழுவதும் கிராமபுறங்களில் 150 சிறியளவிலான ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளை நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சுமார் மூவாயிரம் பயிற்றப்பட்ட ஆடை உற்பத்தித் தொழிலாளர்களை இத்திட்டத்திட்டத்தினூடாக உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இத்திட்டம் 2018ம் ஆண்டு ஜூன் மாதமளவில் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிராமபுறங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் கணவரை இழந்த பெண்களை முன்னிலைப்படுத்தி சிறு மற்றும் மத்திய அளவிலான பெண் சுயதொழில் முயற்சியாளர்களை உருவாக்கப்படவுள்ளனர். பயிற்சிக்காலத்தின் பின்னர் துணி நெய்தல் மற்றும் ஆடை உற்பத்தித் துறையில் பெண்கள் சுயதொழிலை ஆரம்பிப்தற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஏற்கனவே மாத்தறை மற்றும் கேகாலை மாவட்டங்களில் இரு தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது பயிற்சி பெறும் மாணவர்களைக் கொண்டு இவ்வாண்டுக்குள் 76 தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என இலங்கை புடவை மற்றும் ஆடை உற்பத்தி கற்கை நிறுவனத்தின் (SLITA) தலைவர் ஏ. ரொபர்ட் வி பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஆரம்பக்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பெண்களுக்கான தையல் பயிற்சிகளை SLITA வழங்கியுள்ளது. தொடர்ந்து சுயதொழில் முயற்சியாளர்கள் அபிவிருத்தி அதிகாரசபை (NEDA) மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை (IDB) ஆகியன இணைந்து பயிற்சிகளை வழங்கவுள்ளன. தேவையான வடிவமைப்பு மாதிரிகளை தேசிய வடிவமைப்பு நிலையம் மற்றும் தேசிய கலைக்கூடம் என்பன வழங்கவுள்ளன.
பயிற்சி பெற்றோர் பயிற்சி வழங்குதல் (ToT) முறையினூடாக இது வரை 135 பேரை SLITA பயிற்றுவித்துள்ளதுடன் இப்பயிற்சிகள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் வழங்கப்பட்டுள்ளன. பயிற்சி பெற்ற பெண்கள் கிராமிய மட்டங்களில் உள்ள பெண்களுக்கான பயிற்சிகளை வழங்குவர் என்றும் SLITA தலைவர் தெரிவித்துள்ளார்.