மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை இன்று காலை 9.15 மணியளவில் பொறுப்பேற்று கொண்டுள்ளார்.
காலை மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட புதிய அரசாங்க அதிபர், தாண்டவன்வெளி வியாகுலமாதா தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாடுகளில் கலந்து கொண்டார். அதனையடுத்து மாவட்ட செயலகத்திற்கு வருமைதந்த அவர், மாவட்ட செயலக சித்திவிநாயகர் ஆலயத்திலும் வழிபாடுகளில் கலந்து கொண்டு உத்தியோகத்தர்களின் வரவேற்பினை அடுத்து கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றினார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் சாள்ஸ் பதவி உயர்வு பெற்று சுங்க திணைக்கள பணிப்பாளராக சென்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு மாணிக்கம் உதயகுமார் அமைச்சரவையின் அங்கீகாரத்தினை அடுத்து உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டார்.
மட்டக்களப்பிற்கு புதிதாக அரச அதிபராக நியமனம் பெற்ற நிருவாக சேவையின் முதலாம் விசேட தரத்தினைச் சேர்ந்த மாணிக்கம் உதயகுமார் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேச செயலகப்பிரிவுகளில் பிரதேச செயலாளராகக் கடமையாற்றியுள்ளதுடன், கிழக்கு மாகாணத்தின் உள்ளுராட்சி ஆணையாளராகவும், மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராகவும், பின்னர் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டுமான சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளராகவும் கடமையாற்றியவர்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந்த் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன், பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதேச செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.