உலக சுகாதார மாநாடு நாளை மறுநாள் (15) அபுதாபியில் ஆரம்பமாகவுள்ளது.
அபுதாபி முடிக்குரிய இளவரசர், பில்கேட்ஸ் பவுண்டேஷன், காடர் மத்தியநிலையம் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இச்சுகாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையிலான வைத்திய அதிகாரிகள் குழு நாளை (14) அபுதாபி செல்லவுள்ளது.
தொற்றாத நோய்களை தடுக்க அனைவரும் ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் 200 இற்கும் மேற்பட்ட உலக சுகாதார தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேலும் இம்மாநாட்டில் மலேரியா காய்ச்சலை இல்லாதொழிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதுடன் கடந்த 15 வருடங்களாக மலேரியாவை இல்லாதொழிக்க மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் அதன் முன்னேற்றம் எதிர்கால சவால்கள் மற்றும் பொருளாதார தாக்கங்கள் என்பவவை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
இம்மாநாட்டில் இலங்கை விசேட இடம் வகிப்பதுடன் மலேரியாவை இல்லாதொழிப்பது தொடர்பான அமர்வில் இலங்கையில் 2016ம் ஆண்டு மலேரியா முற்றாக இல்லாதொழிக்கப்பட்ட நாடாக உலக சுகாதார அமைப்பின் சான்றிதழை பெற்றுக்கொள்ளல், அரசின் முயற்சி, மலேரியாவை இல்லாதொழித்தமையினால் கிடைத்த நன்மைகள், மக்களின் பங்களிப்பு மற்றும் சுகாதார கல்வி ஆகிய விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.
இம்மாநாட்டில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன உட்பட 5 சுகாதார அதிகாரிகள் மற்றும் 12 பிரதான பேச்சாளர்கள் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.