விவசாய உற்பத்திகளையும் அவற்றின் தரத்தையும் அதிகரித்து, ஏற்றுமதியினை உயர்த்துவதற்கு வினைத்திறனான செயற்பாடொன்றின் மிகவும் அவசியம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று (30) முற்பகல் கண்டி ஏர்ல் ரீஜன்ஸி ஹோட்டலில் இடம்பெற்ற சர்வதேச மிளகு உற்பத்தி அமைப்பின் 45 ஆவது சர்வதேச மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.
எமது நாட்டின் விவசாய பொருளாதாரம் பற்றிய வரலாற்றுத் தகவல்களுடன் நாட்டை மீண்டும் விவசாயப் பொருளாதாரத்தினை நோக்கிக் கொண்டு செல்வதில் மிளகு உற்பத்தித்துறை முக்கிய பங்கு வகிக்கின்றது என்றும் ஜனாதிபதி அவர்கள் இங்கு சுட்டிக்காட்டினார். மிளகு உற்பத்தியாளர்களைப் பலப்படுத்தவும் அத்தொழிற்துறையினை மேம்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், மீள் ஏற்றுமதியினால் கடந்தகாலத்தில் உள்நாட்டில் மிளகின் விலை வீழ்ச்சியடைந்தபோது அது தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது.
தேசிய விவசாய உற்பத்தியையும் கைத்தொழில்களையும் மேம்படுத்துவதற்கு அரசினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள முதன்மைச் செயற்திட்டங்களான தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்திலும் கிராமசக்தி மக்கள் இயக்கத்திலும் மிளகு உற்பத்தியினை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகள் பல உள்ளடங்கியியுள்ளது.
உலகளாவிய ரீதியில் மசாலாப் பொருளாக பயன்படுத்தப்படும் மிளகு, உலகில் அதிகமாக நுகரப்படும் இயற்கை சுவையூட்டியாகும். உலகளாவிய மிளகு நுகர்வு துரிதமாக வளர்ச்சியடைவதுடன் மிளகினை உற்பத்தி செய்யும் நாடுகளின் ஒன்றிணைப்பிற்கான தேவை மேலெழுந்தமையினால் மிளகு உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலை மேம்படுத்துவதனை நோக்காகக் கொண்டு 1972 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச மிளகு உற்பத்தி அமைப்பு இன்று உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச நிறுவனமாகக் காணப்படுகிறது. மிளகினை உற்பத்தி செய்யும் நாடுகளான இந்தோனேசியா, வியட்னாம், மலேசியா, இந்தியா மற்றும் இலங்கை என்பன அதன் நிரந்தர உறுப்புரிமையைக் கொண்டுள்ளதுடன் பிலிப்பைன்ஸ் மற்றும் பப்புவா நியூகினியா என்பன இணை உறுப்புரிமையைக் கொண்டுள்ளன.
உலகில் சுமார் 475,000 ஹெக்டெயார் பரப்பில் மிளகு உற்பத்தி காணப்படுவதுடன் சுமார் 430,000 மெற்றிக்தொன் அளவான மிளகு சர்வதேச சந்தைக்கு வருடாந்தம் விநியோகிக்கப்படுகிறது. அதற்கேற்ப உலகின் வருடாந்த மிளகு நுகர்வு சுமார் 420,000 மெற்றிக் தொன்களாகும்.
இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பயிர்களுள் ஒன்றாக மிளகு காணப்படுவதுடன், சுமார் 40,000 ஹெக்டெயார் பரப்பில் பயிரிடப்படுகின்றது. அத்துடன் வருடாந்தம் சுமார் 15,000 மெற்றிக்தொன் மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டு, அண்ணளவாக 10,000 மில்லியன் ரூபா அந்நியச் செலாவணி ஈட்டப்படுகின்றது. மிளகு ஏற்றுமதி தொடர்பாக 10,000 இலட்சம் பேர் செயற்படுவதுடன் நான்கு இலட்சம் விவசாயக் குடும்பத்தினர் இதனை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.
சர்வதேச மிளகு உற்பத்தி அமைப்பின் 45 ஆவது சர்வதேச மாநாடு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் நவம்பர் 02 ஆம் திகதி வரை கண்டியில் நடைபெறுவதுடன் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 பிரதிநிதிகள் இதில் பங்குபற்றுகின்றனர்.
இலங்கையின் மசாலாப் பொருட்களின் உற்பத்தி தொடர்பான விசேட கண்காட்சியும் இதனுடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அக்கண்காட்சியினையும் ஜனாதிபதி பார்வையிட்டார். நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவ மாணவியருக்கு விருதுகளும் சான்றிதழ்களும் இதன்போது ஜனாதிபதி வழங்கினார். மேலும் மிளகு உற்பத்தித்துறையின் சிறந்த உற்பத்தியாளர், சிறந்த ஏற்றுமதியாளர் மற்றும் சிறந்த பெறுமதிசேர் உற்பத்தியாளர் போன்ற விருதுகளையும் இதன்போது ஜனாதிபதி வழங்கினார்.
அமைச்சர் தயா கமகே, மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, சர்வதேச மிளகு உற்பத்தி அமைப்பின் தலைவர் பந்துல விக்கிரமாரச்சி, நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹேக் தீ லியன், சர்வதேச மிளகு உற்பத்தி அமைப்பின் இலங்கை பிரதிநிதி கலாநிதி அசோக்க செனெவிரத்ன உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.