இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன செயற்றிறனை மேம்படுத்தவும் விநியோகத்தை அதிகப்படுத்தவும் புதிய திட்டங்கள் பல அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக்க ரணதுங்க தெரிவித்தார்.
கூட்டுத்தாபன செயற்றிட்டங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களை தௌிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கூட்டுத்தாபனத்தில் புதிய செயற்றிட்டங்கள் கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டின் அபிவிருத்திப் பாதைக்கு அவசியமான சேவையை வழங்கும் நோக்குடன் இத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதிகரித்து செல்லும் கனிய வள எண்ணெய் கேள்விக்கேற்ப வழங்குவதற்கும் சிக்கனமாக பயன்படுத்துவதற்குமான திட்டங்களும் இதில் உள்ளடங்கியுள்ளன.
புதிய Continuous Catalyst Regeneration (CCR) பிரிவு ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கை கடந்த 6 மாதங்களாக இடம்பெற்றது. சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் சுத்திகரிப்பு பகுதி முழுமையாக நவீனமயப்படுத்தப்பட்டுள்ளதுடன் தானியங்கி முறையில் செயற்படும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனூடாக பயன்தரக்கூடிய தீர்வு கிடைத்துள்ளது.
முதுராஜவல, கொலன்னாவ ஆகியவற்றில் களஞ்சியப்படுத்தல் வசதிகளை ஏற்படுத்தி புதிய விநியோக தொகுதியை ஏற்படுத்தல், புதிய பொருளாதார வலயங்களில் எண்ணெய் களஞ்சிய நிலையங்களை உருவாக்குதல், விநியோக செயற்பாடுகளை புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்தல் செயற்பாடுகளும் இத்திட்டங்களினூடாக செயற்படுத்தப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.