நாட்டின் 33 வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை மற்றும் சத்திரசிகிச்சை பிரிவுகளை அபிவிருத்தி செய்வதற்கு சலுகையடிப்படையில் அவுஸ்திரேலியா கடனுதவி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சுகாதாரம் போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் கைச்சாத்திடப்பட்டது.
Odelga MED Ges.M.B.H நிறுவனத்தின் பணிப்பாளர் பீடர் ஹாக், சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சுகததாச ஆகியோர் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் வைத்து இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இதனடிப்படையில் 9587574 யுரோ செலவிட்டு அவசர மற்றும் சத்திர சிகிச்சை பிரிவுகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் நாட்டின் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக இதுவரை 70 முதலீடுகள் இதுவரை கிடைத்துள்ளது என்றும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
2020ம் ஆண்டளவில் ஈ ஹெல்த் திட்டத்தின் கீழ் 300 வைத்தியசாலைகள் கணனி மயப்படுத்தப்படவுள்ளதுடன் ஈ ஹெல்த் அட்டைகளும் பொது மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பில் இந்திய நிறுவனமொன்றுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்தியாவினால் வழங்கப்பட்ட அம்பிலன்ஸ் வாகனங்களை மக்கள் தற்போது பயன்படுத்துகின்றனர். எதிர்காலத்தில் மேலும் 250 வாகனங்கள் வழங்குவதாக இந்திய அமைச்சர் உறுதிளித்துள்ளார். இச்சேவையை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தவுள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன்போது, பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசிம், சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சுகததாச, மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) ஜனக்க ஶ்ரீ சந்திரகுப்த, பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சரத் அமுனுகம, வைத்தியாசாலை பணிப்பாளர்கள் மற்றும் அவுஸ்திரேலிய Odelga MED Ges.M.B.H நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பீட்டர் ஹாக் ஆகியோர் கலந்துகொண்டனர்.